சாஸ்திரம் என்றால்
என்ன?
சாஸ்திரம் என்பது ஒரு நூல்.
வேதம் என்பது ஒரு சாஸ்திரம். இந்த சாஸ்திரமானது ஆதி காலத்தில் தெய்வத்தினடத்தில்
இருந்து குரு சிஷ்ய பரம்பரையாக வந்துள்ளது. குரு சாஸ்திரத்தை உபதேசிக்க
சிஷ்யனானவன் அதனை மனதில் கிரஹித்துக்கொண்டான். இப்படியாக காது வழியாக கேட்கப்பட்டு
காப்பாற்றப்பட்டு வந்தது. சாஸ்திரமானது ஒலி வடிவமாக இருந்ததினால் “ஸ்ருதி” என்றழைக்கப்படுகிறது. குருவிடமிருந்து இந்த
சாஸ்திரத்தை கிரஹித்துக்கொண்ட ரிஷிகள் அவரவர்கள் மொழியில் வேதத்தின் கருத்தை
மாற்றாமல் எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த சாஸ்திரத்திற்கு “ஸ்மிருதி” என்று
பெயர். சாஸ்திரத்தின் கருத்துக்கள் மாறாமல் கதைகளின் மூலம் தெரியப்படுத்தினால்
அதற்கு “புராணங்கள்” என்று பெயர். உண்மை சம்பவங்கள் மூலமாக சாஸ்திரத்தின்
கருத்துக்களைக் கூறினால் அதற்கு “இதிகாசங்கள்” என்று பெயர்.
“ஒரு முக்கிய
பலனுக்காக உருவாக்கப்பட்டு அந்த முக்கிய பலனை அடைவதற்கான அனைத்து அறிவையும்
கொடுப்பது சாஸ்திரம் எனப்படும்.”
நம்மிடம் பலவிதமான
சாஸ்திரங்கள் இருக்கின்றன. அதில் வேதம் “ரிக், யஜுர், சாமம், அதர்வணம்” என்ற
நான்கு பகுதிகளாக நாம் அறிந்துள்ளோம். வேதத்திற்கு நாம் சாஸ்திரம் என்ற
தன்மையை கொடுத்துவிட்டால், வேதமானது நாம் சாஸ்திரத்துக்கு கொடுத்த இலக்கணப்படி
இருக்கவேண்டும். அதாவது ஒரு முக்கிய பலனுக்காக அது உருவாக்கப்பட்டு அந்த முக்கிய
பலனை அடைவதற்கு எவைகள் எல்லாம் தேவையோ அவைகள் அனைத்தும்
கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். வேதமானது மனிதப் பிறவியின் முக்கியமான நோக்கத்தை (மோக்ஷம்)
இங்கே முக்கிய பலனாக எடுத்துரைத்து அதை அடைய என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும்
என்பதை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.
வேதத்தில் என்னென்ன
கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன என்பதை அடுத்த இடுக்கையில் சிந்திப்போம்.

No comments:
Post a Comment